தகுதிகள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் உயர்கல்வி பெற முடியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவிக்கின்றனர். அதற்கு காரணம் பணம் தான். மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற உயர்கல்வி படிக்க பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே கல்வி கடன் திட்டம். இதை உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் பெற முயற்சிக்கலாம். இதற்கு மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாட பிரிவை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். பட்ட படிப்பு, முதுநிலை பட்ட படிப்பு, தொழிற்கல்வி என எந்த உயர்கல்வியை பயிலவும் கல்வி கடன் பெற முடியும். இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் கல்வி கடன் வழங்கப்படுகிறது. சில கல்வி நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து செயல்படும். அது போன்ற கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலும் போது, அதனுடன் இணைந்து செயல்படும் வங்கியிலேயே கல்வி கடன் எளிதாக வழங்கப்படும். உள்நாட்டில் கல்வி பயில 10 லட்சம் ரூபாய் வரையும், வெளிநாட்டில் கல்வி பயில 20 லட்சம் ரூபாய் வரையும் கல்வி கடன் வழங்கப்படும். கடன் பெற விரும்பும் மாணவர்கள் வங்கி கேட்கும் சில ஆவணங்களை முறையாக சேர்த்து விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். விண்ணப்பங்களும், ஆவணங்களும் சரி பார்க்கப்பட்ட பிறகு, மாணவர் மற்றும் அவரது குடும்பத்தாருடன் வங்கி அதிகாரி நேரடியாக கலந்துரையாடுவார். மாணவரின் தந்தை அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம், குடும்ப சொத்து, மாணவர் சேர்ந்துள்ள பாட பிரிவின் தன்மை போன்றவை குறித்த தகவல்களை கேட்டறிவார்கள். மாணவர்கள் பெறும் கடன் தொகை 4 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்ச வட்டி விகிதத்திலேயே வட்டி கணக்கிடப்படும். 4 லட்சம் ரூபாய்க்கு மேல் கல்வி கடன் இருந்தால், குறைந்தபட்ச வட்டி தொகையுடன், ஒரு விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும். ஆனால், இந்த வட்டி விகித கணக்கீடு வங்கிக்கு வங்கி மாறுதலுக்குரியது. ஒரு சில வங்கிகள், மாணவிகளுக்கும், ஒரு சில வங்கிகள் குறிப்பிட்ட கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் வட்டி சலுகைகளை வழங்குகின்றன. கல்வி கடன் பெறுவதற்கு ஜாமீன் கையெழுத்து அல்லது ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பதும், மாணவர் கோரும் கடன் தொகையை பொறுத்து அமையும். சொத்து என்றால் வங்கி கணக்கில் பண வைப்பு அல்லது வீட்டு பத்திரம் போன்றவையாகும். இவற்றுக்கான ஆதாரங்களை கடன் பெறும் போது அளிக்க வேண்டும். 4 லட்சம் ரூபாய் வரையான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பதில்லை. அதற்கு மேல் கடன் தொகை இருந்தால், சில நேரங்களில் மூன்றாம் நபரின் ஜாமீன் கையெழுத்து தேவைப்படும். இந்த கடன் தொகையை படிக்கும் காலத்தில் திருப்பி செலுத்தத் தேவையில்லை. சில வங்கிகள், படிக்கும் காலத்தில் கடன் தொகைக்கு வட்டியை மட்டும் வசூலிக்கின்றன. படித்து முடித்து வேலை கிடைத்ததும் அல்லது படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும் கடனை திருப்பி செலுத்த ஆரம்பிக்க வேண்டும். ஓராண்டுக்கு மேலும் கடனை திரும்ப செலுத்த தாமதிக்கக் கூடாது. மேலும், 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்தி விட வேண்டும். ஆவணங்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை அரசு அதிகாரியின் சான்று பெற்று (அட்டஸ்டட்) வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்: மாணவரது பிறப்பு சான்றிதழ் குடியிருப்பு சான்றிதழ் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் புகைப்படம் மதிப்பெண் சான்றிதழ் முந்தைய கல்வி தகுதிக்கான சான்றிதழின் நகல்கள் மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருமான சான்றிதழ் பெற்றோர் அல்லது ஜாமீன் கையெழுத்து போடும் நபரின் கடந்த 6 மாதத்துக்கான வங்கி கணக்கு அறிக்கை வெளிநாட்டு படிப்புக்கு விண்ணப்பித்திருப்பின், பாஸ்போர்ட் அல்லது விசா, விமான கட்டணத்துக்கான ரசீது வெளிநாட்டில் படிக்க கல்வி கடன் வழங்கும் வங்கிகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சிண்டிகேட் வங்கி அலகாபாத் வங்கி பாங்க் ஆப் பரோடா தேனா வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி ஹெச்டிஎப்சி வங்கி ஆதாரம்: தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை