<p style="text-align: justify;">தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;"><strong>இயக்ககம் அறிமுகப்படுத்தும் புதிய இளநிலைப் பட்டப்படிப்பு – பண்ணைத் தொழில்நுட்பம்</strong></h3> <p style="text-align: justify;">உழவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவைப் பெருக்கிக் கொள்வதோடு நிலத்தினைப் பண்படுத்துதல் முதல் அறுவடை வரை, தானியங்களைச் சேமித்தல், பதப்படுத்துதல், மதிப்பூட்டுதல் வரையிலான அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பட்டப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">பருவ முறையில்(செமஸ்டர்) மூன்று ஆண்டுகளுக்கு ஆறு பருவங்களில் பாடங்கள் நடத்தப்படவுள்ளன. அனுபவம் வாய்ந்த வேளாண் அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள்/ பேராசிரியர்களால் தமிழ் வழிக்கல்வியில் உழவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து பாடங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பட்டப்படிப்பின் முக்கிய அம்சமாக அனைத்து தொழில்நுட்பங்களுக்கான செயல்முறை விளக்கங்கள் நேர்முகப் பயிற்சி வழியாக எளிய முறையில் தமிழில் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளன.</p> <p style="text-align: justify;">தமிழகமெங்கும் உள்ள 36 வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 14 வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக, பாடத்திட்டங்கள் வழங்கப்படும். எனவே, தங்களுக்கு அருகாமையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மையங்கள் மூலமாக உழவர்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.</p> <p style="text-align: justify;">பத்தாம் வகுப்பு படித்த 30 வயது நிரம்பிய அனைவரும் இத்தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் இந்த ஆண்டு இப்பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify;">இந்த இளநிலைப் பண்ணைத் தொழில்நுட்பப் பட்டப் படிப்பின் மூலம் கல்வி கற்கும் உழவர் சுயதொழில் முனைவோராக மாற வாய்ப்புண்டு. மேலும் சொந்த முயற்சியினால் வேளாண்மை, அதனைச் சார்ந்த துணைத்தொழில்களை அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ள வழிகாட்டுதலாக அமையும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,</p>