<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify;">வீட்டைத் தவிர குழந்தைகளை கவனித்து பராமரிக்கும் பகல் நேர குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் ஒரு சில மையங்கள் அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் உதவக் கூடியதாக அமைந்துள்ளன. அவற்றில் சில பின்வருபவையாகும்,</p> <p style="text-align: justify;"><strong>பகல்நேரக் குழந்தைகள் காப்பகம்</strong></p> <ul style="text-align: justify;"> <li>மாண்டிஸரிபள்ளி</li> <li>கிண்டர் கார்டன்</li> <li>நர்சரிப்பள்ளி</li> <li>பால்வாடி</li> </ul> <h3 style="text-align: justify;">அங்கன்வாடி பகல் நேரக் குழந்தைகள் காப்பகம்</h3> <p style="text-align: justify;">இவ்வகை மையங்கள் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் சமயத்தில் குழந்தைகளை நாள் முழுவதும் பராமரிக்கின்றன. ஆரம்ப காலங்களில் இவ்வகை மையங்கள் குழந்தைகளுக்கு நல்ல பாதுகாப்பான சூழ்நிலையை வழங்கி, அவர்கள் மற்ற குழந்தைகளோடு கலந்து பழகுவதற்கு உதவும் ஒரு மையமாகவே இருந்தது. ஆனால் தற்காலத்தில் அதன் நோக்கமானது பரந்து விரிந்து குழந்தைகளின் அறிவித் திறனைத் தூண்டும் சூழலை ஏற்படுத்துபவையாக மாறியது. இருப்பினும் அவைகளின் முக்கிய நோக்கமானது சமூக, மன எழுச்சி, அறிவு வளர்ச்சிக்கு உதவ கூடியதாக மாறியது.</p> <h3 style="text-align: justify;">மாண்டிஸரி பள்ளி</h3> <p style="text-align: justify;">மரியா மாண்டிஸரி அம்மையாரின் கல்வித் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு அமையப்பட்ட பள்ளிகள் மாண்டிஸரி பள்ளி என அழைக்கப்படுகிறது. அவர் மாற்றுத் திறனுடைய குழந்தைகளான மன ஊனமுற்ற குழந்தைகளுக்கு பயிற்சியளித்து கல்வி கற்க, எழுத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதாரண குழந்தைகளைப் போல் இருக்க வைப்பதில் சாதனை புரிந்தார்.</p> <h3 style="text-align: justify;">கிண்டர் கார்டன்</h3> <p style="text-align: justify;">இன்றைய கிண்டர் கார்டன் மற்றும் முன்பள்ளியின் பாடத்திட்டமானது அதிகப்படியான முக்கியத்துவத்தை வெற்றி பெறுவதற்கும், சாதனை புரிவதற்கும் ஏற்றாற் போல் உள்ளதால் குழந்தைகளிடம் அதிகப்படியான மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என குழந்தைக் கல்வி பற்றி அக்கறை உடையநிபுணர்கள் நம்புகின்றனர். ஏனெனில் கிண்டர் கார்டன் பள்ளியானது வெற்றியினை மட்டும் நிர்ணயித்துத் தொடங்கப்படவில்லை. ப்ரடிரிக் ப்ராபெல்லின் கருத்துப்படி கிண்டர் கார்டன் என்பது குழந்தைகளுக்கான ஒரு (கார்டன்) பூங்காவாகும். செடிகளை வளர்ப்பது போல் குழந்தைகள் கவனமாக பராமரிக்கப்பட வேண்டும். குழந்தை பூங்காவானது குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்கள் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.</p> <h3 style="text-align: justify;">நர்சரிப் பள்ளி</h3> <p style="text-align: justify;">நர்சரிப் பள்ளி கருத்தானது லண்டனைச் சேர்ந்த மார்கரேட் மாக்மிலன் சகோதரிகளால் உருவாக்கப்பட்டது. அவர்கள் குழந்தைகளைப் பராமரித்து அவர்களின் உடல் தேவைகளைப்பூர்த்தி செய்து, ஆரோக்கியமான சூழ்நிலையிலிருக்கச் செய்வதற்காக குழந்தை நல மையங்களை உருவாக்கினார்கள். பின்னாளில் இதுவே நர்சரிப் பள்ளியாக மாறியது. இது 2-7 வயதான குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்டது.</p> <h3 style="text-align: justify;">பால்வாடி</h3> <p style="text-align: justify;">கிரேவால் (1984) கூற்றுப்படி பால்வாடி என்பது விலைமலிவான பொருட்களைக் கொண்டு விஞ்ஞானரீதியாகக் கிராமப்புறங்களில் செயல்பட்ட ஒரு மாதிரிப் பள்ளியாகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உருவான நர்சரிப்பள்ளியாகும்.</p> <p style="text-align: justify;">சிறு குழந்தைகளுக்கு கற்பிக்க நேரம் எடுத்துக் கொண்டாலும் அது சவாலுக்குரிய பெருமைக்குரிய செயலாகும். அவர்கள் கற்க கூடிய பருவத்தில், ஏற்றுக் கொள்ள கூடிய பருவத்திலிருப்பதால் நாளுக்கு நாள் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது முக்கியமான இன்றியமையாத கடமையாகும்.</p> <p style="text-align: justify;">சிறு குழந்தைகளை உணர்வுபூர்வமாக கட்டுப்படுத்தி ஒழுங்கான முறையில் வழிகாட்டுதல் வேண்டும். ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது குழந்தைகளிடத்து மறைந்துள்ள திறமைகளை வெளிக் கொணர்ந்து கற்பதற்கும், மற்றும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் உதவுதல் ஆகும். கற்கும் சூழ்நிலை முறையான வழியில், தேவையான சாதனங்களோடு நிகழும் போது குழந்தைகள் முறையாக வழிநடத்தப்பட வேண்டும்.</p> <p style="text-align: justify;">கிண்டர் கார்டனை உருவாக்கிய ப்ராபெல்லின் கூற்றுப்படி முன்பள்ளி வயது, அவர்களுக்கு கல்வி அனுபவங்களை ஏற்படுத்துவதில் முக்கிய படியாக இருக்கிறது என்கிறார். குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது அவர்களின் தனித்தன்மைக்கு ஏற்றவாறு கல்வி அளித்தல் அவசியமாகும். தாட்ச்யாயணி (1969) அவர்களின் கூற்றுப்படி நர்சரிப் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் ஆரம்பப் பள்ளியில் சேரும் போது மற்ற குழந்தைகளுடன் எளிதாக ஒத்துப் போகவும், வகுப்பில் கல்வியில் சாதனை புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். ஏனெனில் நர்சரிப் பள்ளியில் பெற்ற அனுபவங்கள் மனரீதியாகவும் கல்வி கற்கவும் தயாராக இருப்பதற்கு உதவுகிறது.</p> <p style="text-align: justify;">ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை</p> </div>