<p style="text-align: justify;">திறன் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;">பிரச்சனைகள்</h3> <ul> <li style="text-align: justify;">ஒரு காலத்தில் உயர்குடி மக்களுக்கானதாக இருந்த உயர்கல்வி இன்று யாருக்கு வேண்டுமானாலும் சாத்தியப்படக்கூடிய ஒன்றாக மாறி உயர்கல்வி வளர்ச்சி பிரமிக்கத்தக்கதாக உள்ளது. இந்தியாவில் உயர்கல்வி அடைந்துள்ள அசுர வளர்ச்சி உலகை வியக்க வைத்துள்ளது.</li> <li style="text-align: justify;">சுதந்திரம் அடைந்த நேரத்தில், 2,15,000 மாணவர்களுக்கு 20 பல்கலைக்கழகங்களும், 496 கல்லூரிகளும் உயர்கல்வியைப் போதித்தன. ஆனால் இன்று 757 பல்கலைக்கழகங்களும், 38,056 கல்லூரிகளும், 11,922 ஆராய்ச்சி நிறுவனங்களும் 33.3 மில்லியன் மாணவர்களுக்கு உயர்கல்வியை போதித்து வருகின்றன.</li> <li style="text-align: justify;">இந்த எண்ணிக்கைச் சாதனையை மறுக்க முடியாது. ஆனால் இந்த வளர்ச்சி, திட்டமிட்ட, முறைப்படுத்தப்பட்ட, வாய்ப்புகளைப் பயன்படுத்த தகுதியுள்ள வளர்ச்சியா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்</li> <li style="text-align: justify;">ஏனென்றால், கல்வித்துறை வளர்ந்த வேகம், கல்வி நிறுவனங்கள் வளர்ந்த எண்ணிக்கை இரண்டுமே பிரச்னைகளையும் சிக்கல்களையும் உருவாக்கவல்ல தன்மைகளைக் கொண்டவை. இதை யாரும் மறுக்க இயலாது. அடுத்து இப்படி வளர்ந்த வேகமும், எண்ணிக்கையும் சிக்கலைக் கொண்டுவரும்போது இந்த வளர்ச்சியில் பங்கெடுத்த தனியார் நிறுவனங்கள் கொண்டுவந்த சிக்கல்கள் ஏராளம்.</li> <li style="text-align: justify;">எனவே உயர்கல்வி வளர்ச்சியின் வேகமும், எண்ணிக்கையும் தனியாரின் பங்களிப்பால் வந்த பிரச்னைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு சரியான கோணத்தில் முடிவுகள் எடுத்து சரி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டுகளில் அது நடைபெறவில்லை நம் நாட்டில். இன்று நாம் முதன்மையாக சந்திக்கின்ற பிரச்னை, தொழிலாளர் சந்தையின் தேவையும், உயர்கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் முரண்பட்ட நிலையில் உள்ளதே. சந்தைக்குத் தேவையான மாணவர்களை நமது கல்வி நிறுவனங்களால் தேவைக்கு ஏற்றாற்போல் தயார் செய்து கொடுக்க முடியவில்லை என்பதைத் தெள்ளத்தெளிவாக காட்டுகின்றது.</li> </ul> <h3 style="text-align: justify;">தீர்வுகள்</h3> <ul> <li style="text-align: justify;">தேவை என்பது வேறு ஒரு நிலையில் உள்ளது. கல்வி நிறுவனங்கள் கண்ணை மூடிக்கொண்டு அதிக எண்ணிக்கையில் தேவையில்லாத தொழில்களுக்கு மாணவர்களைத் தயார் செய்து அனுப்புகின்றன. தொழிலாளர் சந்தையின் தேவை பற்றி ஒரு சில ஆய்வுகள் இருந்தாலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு கட்டளை இடும் அளவிற்கு சீரிய உயர் ஆய்வு பெரிய அளவில் இந்தியாவில் நடைபெறவில்லை. அதேபோல் உயர்கல்வி நிறுவனங்களும் இவ்வளவு பெரிய தொகையை மூலதனம் செய்து மாணவர்களை உருவாக்கும்போது, சந்தையின் தேவை பற்றிய ஒரு பொதுப் புரிதலே இல்லாமல் மக்களின் ஆசைக்கு தீனிபோட்டு மாணவர்களை உருவாக்கி வேலை இல்லாமல் செய்ததுதான் இன்றைய உயர்கல்வி தேக்க நிலைக்குக் காரணம்.</li> <li style="text-align: justify;">சந்தையின் தேவையை பூர்த்தி செய்ய ஒரு நிலையில் ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் போன்ற நிறுவனங்களை வலுப்படுத்துதலும், புதியதாக கல்வி நிறுவனங்களை உருவாக்குவதும், அவை அனைத்தையும் உலகத்தரத்திற்கு உயர்த்துவதும்தான் இன்றைய தேவை.</li> <li style="text-align: justify;">அறிவுப் பொருளாதாரத்தில் பங்கெடுக்க, ஆராய்ச்சி ஆற்றல் பெருக்கப்பட்ட மாணவர்களை அதிக அளவில் உருவாக்கிட வேண்டும்.</li> <li style="text-align: justify;">மாறாக இந்தியாவில் சான்றிதழ் தருவதற்கு முக்கியத்துவம் தரும் கல்வி நிலையங்களாகத்தான் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன</li> <li style="text-align: justify;">நாம் உடனடியாக அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி நிலையங்களில் உற்பத்தி செய்கின்ற மாணவர்களை சந்தைக்குத் தேவையான நிலையில் முறைப்படுத்தி உருவாக்காவிட்டால், இந்தக் கல்வி என்பது சமூகத்திற்கு பிரச்னைகளை உருவாக்கக் கூடிய வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கும்.</li> <li style="text-align: justify;">இன்னும் நம் சமூகத்தில் திறன் வளர்ப்புக் கல்விக்கான விழிப்புணர்வு ஏற்படவில்லை.</li> <li style="text-align: justify;">இந்த நிலைமாறி சமூகம் வரை இதற்கான விழிப்புணர்வு வந்தாக வேண்டும். இந்தச் செயல்பாடுகள் ஒரு இயக்கம்போல் நடைபெற வேண்டும். அந்த முனைப்பு அனைவருக்கும் வந்திட வேண்டும்.</li> </ul> <p style="text-align: justify;"><strong>ஆதாரம் : </strong>தினமணி - கல்வி வழிகாட்டி</p>