<p style="text-align: justify;">மாணவர்களின் விருப்பமும் பொறுத்தமான கல்லூரிகளும் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.</p> <h3 style="text-align: justify;">பிறரின் ஆலோசனைகள்</h3> <ul style="text-align: justify;"> <li>ஒரு கல்வி நிறுவனம் எத்தகைய தன்மையுடையது மற்றும் அங்கே படித்தால் கிடைக்கும் அனுபவம் மற்றும் எதிர்கால நன்மைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று, அங்கே படிக்கும் சக நண்பர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சொல்லும் அறிவுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.</li> <li>மேலும், அந்தக் கல்லூரியில் extra curricular activities -க்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.</li> <li>ஏனெனில், ஒரு கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதன் நிர்வாகம் சொல்லும் தகவல்கள் நம்பகமானவையா? என்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே, நேரடியாக அனுபவப்பட்டவர்கள் கூறுவது மட்டுமே உண்மையான தகவல்.</li> </ul> <h3>உள்கட்டமைப்பு</h3> <p style="text-align: justify;">ஒரு கல்லூரியைப் பற்றிய மதிப்பீட்டில், அதன் உள்கட்டமைப்புக்கு பிரதான இடம் உண்டு. சிறந்த உள்கட்டமைப்பானது, ஒரு மாணவரின் கல்லூரி வாழ்க்கை அனுபவத்தை இன்பமானதாக ஆக்குகிறது. எனவே, சிறப்பான உள்கட்டமைப்புள்ள கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.</p> <p style="text-align: justify;">சிறந்த உள்கட்டமைப்பானது, மாணவர்களின் பல்வேறு திறமைகள் வளர உதவியாக இருக்கின்றது. மேலும், மாணவர்களின் மனதுக்கும் இதமளிப்பதாக உள்ளது.</p> <p style="text-align: justify;">தேசிய அளவில் அல்லது மாநில அளவிலாவது புகழ்பெற்ற கல்லூரியில் படிக்க வேண்டுமென்பது, ஏறக்குறைய ஒவ்வொரு மாணவரின் கனவாகவும் உள்ளது. ஏனெனில், இதுபோன்ற கல்வி நிறுவனங்களில், வெளிப்படையான மற்றும் ஒருங்கிணைந்த முறையிலான கல்வி வழங்கப்படும் என்பதே காரணம்.</p> <p style="text-align: justify;">இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் சீனியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடமிருந்து, வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும் கிடைக்கும். இத்தகைய கல்வி நிறுவனங்களில் கிடைக்கும் தரமான மற்றும் உபயோகமான அறிவுசார் அனுபவங்கள் மற்றும் நாட்டின் வேறுபட்ட இடங்களுக்கு ப்ராஜெக்ட் மேற்கொள்ள செல்வதற்கான வாய்ப்புகள் போன்றவை, மாணவர்களை, இத்தகைய கல்வி நிறுவனங்கள் நோக்கி சுண்டி இழுக்க காரணம்.</p> <h3 style="text-align: justify;">வளாக வாழ்க்கை</h3> <p style="text-align: justify;">அனுபவித்து கற்பது என்பது ஒரு மாணவருக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சில புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில், பிராக்டிகல் வகுப்புகளின்போது, மாணவர்கள் தங்களின் லேப்டாப்களில் பாடல்களைக் கேட்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். இதன்மூலம், தங்களின் சூழலை இனிமையாக அனுபவிக்கிறார்கள். தினசரி பாடத்திட்டங்கள் நெருக்குதல் மிக்கதாக இருந்தாலும், இதுபோன்ற கல்வி நிறுவனங்களில், ஆசிரியர்கள் நண்பர்களைப் போல் நடந்துகொள்கிறார்கள். கற்பித்தல் செயல்பாட்டில் நகைச்சுவை உணர்வும் இடம்பெறுகிறது. இதன்மூலம், கற்றல் என்பது ஆர்வமான ஒன்றாக மாறுகிறது.</p> <p style="text-align: justify;">மேலும், படிப்பைத் தவிர, கல்லூரி வளாகத்திற்குள் பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. இதன்மூலம், மாணவர்கள், தேவையில்லாமல், கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே செல்வதற்கான தேவை இல்லாமல் போகிறது.</p> <h3 style="text-align: justify;">எதிர்கால வேலைவாய்ப்புகள்</h3> <p style="text-align: justify;">ஒரு கல்வி நிறுவனத்தில் படித்தால், கட்டாயம் வேலை கிடைக்குமா என்பதுதான், மாணவர்களால் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, தொழில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு அதிகம். எனவே, எதுபோன்ற கல்லூரியில் படித்தால், பெரிய நிறுவனங்கள், வளாக நேர்முகத்தேர்வுக்கு வருவார்கள் மற்றும் எத்தனை பேர் வருவார்கள் போன்ற அம்சங்களுக்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவேதான், ஐஐடி.,கள், என்.ஐ.டி.,கள் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுக்கும், பிட்ஸ்-பிலானி உள்ளிட்ட புகழ்பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், அண்ணா பல்கலைக்கழகம் போன்று மாநில அளவில் புகழ்பெற்று விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் கொடுத்து, அவைகளில் இடம்பிடிக்க போட்டிப் போடுகிறார்கள்.</p> <h3>பிரச்சினைகள்</h3> <ul style="text-align: justify;"> <li>சில பல்கலைகள், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், ஒரு மாணவரின் ஒட்டுமொத்த அறிவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. விளையாட்டு, மென் திறன்கள், Extra curricular activities போன்ற பல்வகையான திறன்களுக்கு சில பல்கலைகள் அல்லது கல்லூரிகள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் பல மாணவர்கள் ஏமாற்றமடைகிறார்கள்.</li> <li>மேலும், சில கல்வி நிறுவனங்களில், அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், அங்கே படிப்பவர்களுக்கு பெரியளவிலான பணி வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்ற குறைகள் உண்டு.</li> <li>அதேபோன்று, சில புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை சுற்றியுள்ள பகுதிகள் பொருந்தாதவையாக இருக்கும். இதனால், மாணவர்களுக்கு தொந்தரவுகள், சுற்றுப்புற சீர்கேடுகள் போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, எவ்வளவுதான் நிறைகள் இருந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.</li> </ul> <h3 style="text-align: justify;">வாழ்க்கைக்கான கல்வி</h3> <p style="text-align: justify;">ஒரு மாணவரின் எதிர்கால வாழ்வை தீர்மானிப்பதில், பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள், முக்கியப் பங்கை ஆற்றுகின்றன. எனவேதான், சரியான உயர்கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சில மாணவர்களுக்கு, ஆராய்ச்சி செய்வதில் அதிக விருப்பம் இருக்கலாம். சில மாணவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டுமென்பதில் விருப்பம் இருக்கலாம். இன்னும் சிலருக்கு, extra curricular activities -களில் விருப்பம் இருக்கலாம். எனவே, தத்தமது விருப்பங்களுக்கு, எந்தப் பல்கலை அல்லது கல்லூரி சரிப்பட்டு வரும் என்பதை ஆராய்ந்தே, அங்கு சேர வேண்டும்.</p> <p style="text-align: justify;">பொதுவாக, வசதியும், வாய்ப்புகளும் இருக்கும் மாணவர்களுக்கே, தங்களுக்கான உயர்கல்வி நிறுவனங்களை விருப்பம்போல் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பதே இன்றைய நடைமுறை உண்மை. ஆனாலும், கிடைத்த கல்லூரியில் படிக்கும் வசதி, வாய்ப்புகளற்ற மாணவர்கள் தளர்ந்துவிட வேண்டியதில்லை. படிக்கும் கல்வி நிறுவனம் மட்டுமே, ஒருவரின் தலையெழுத்தை தீர்மானித்துவிடுவதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி, நேரத்தை வீணாக்காமல், பாடப்புத்தகம் தவிர, பரவலான பொது அறிவையும், மென்திறன்களையும் வளர்த்துக் கொண்டால், வாழ்க்கையில் நிச்சயம் வெற்றியடையலாம். ஏனெனில், வாழ்க்கையில் நிறைய சாதித்த பலபேர், சாதாரண கல்லூரிகளில் படித்தவர்களாக இருக்கின்றனர்!</p> <p style="text-align: justify;">ஆதாரம் : தினமலர் – வெற்றி வழிகாட்டி கையேடு</p>