<div id="MiddleColumn_internal"> <h3 style="text-align: justify;">அறிமுகம்</h3> <p style="text-align: justify;">வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த பாடத்திட்டங்களான கால்நடை, மீன் வளர்ப்பு, தோட்டக்கலை பயின்ற மாணவர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் இருந்து வந்தன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் இவர்களுக்குக் கிடைத்து வந்த வேலைகள் ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே சென்றது. எனவே, இப்பட்டதாரிகள் வேலையில்லா நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும், வேளாண் விரிவாக்கம் இன்று வரை தனிநபர் மையமாக நடைபெற்று வந்தது. ஆனால், இனி வரும் காலங்களில் கூட்டு விரிவாக்கம் தான் சாலச் சிறந்ததாகும். இதனுடன் தகவல் தொழில்நுட்பம் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளதால், அவற்றை வேளாண்மை விரிவாக்கத்தில் பயன்படுத்த சாத்தியக்கூறுகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் வேளாண் பட்டதாரியை வேலை அளிப்பவராக மாற்ற இந்தியாவிலுள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் முடிவெடுத்தன. இதற்குத் தக்கவாறு வேளாண்மைப் பாடத்திட்டத்தில் மேலாண்மை மற்றும் வேளாண் தொழில் முனைவோர் பயிற்சிப் பாடங்கள் புகுத்தப்பட்டன.</p> <p style="text-align: justify;">இதனிடையே வேளாண் வணிகத்திலுள்ள மேலாண்மை பாடத்திட்டத்தில், வணிக வேளாண்மை முன்னேற்றம், செயல் உற்பத்தி மற்றும் செயல் மேலாண்மை, இடுபொருள் மற்றும் விளைபொருள் மேலாண்மை, விற்பனை மேலாண்மை, நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மை போன்ற பிரிவுகளில் வேளாண் பட்டதாரிகள் பயிற்சி பெறும் வண்ணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாண் வணிகத்தைத் தொடங்கிட அரசு தரும் சலுகைகள் மானியங்கள் மற்றும் ஊக்குவிப்பு கொள்கைகள் பற்றியும் கற்பிக்கப்படுகின்றன.</p> <h3 style="text-align: justify;">பயிற்சியின் வரன்முறைகள்</h3> <ul> <li style="text-align: justify;">தகவல் மேலாண்மை அமைப்பைப் பயன்படுத்தி வேளாண் வணிகம் உலகமெங்கும் பரவிட, மின்கல வணிகத்திலும் (e-commerce) மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.</li> <li style="text-align: justify;">வேளாண் பட்டதாரிகளை, தொழில் முனைவோராக மாற்றிடத் தேவையான தகுதிகள் எல்லோரிடமும் இருக்க வாய்ப்பில்லை. எந்தத் தகுதிகளில், வேளாண் தொழில் முனைவோர் பின்தங்கி இருக்கின்றனரோ அத்தகுதிகளில் வல்லமை பெற்றிட பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை இல்லையெனில், இரண்டு தொழில் முனைவோர் கூட்டாக சேர்ந்து, இருவர்களுக்கிடையே உள்ள தகுதிகளை பயன்படுத்தியும் வேளாண் வணிகத்தை தொடங்கிடலாம். தொழில் முனைவோர் தொழிலைத் தொடங்கிட, முதலில் சந்தை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சந்தை ஆய்வு கூற்றின் படி எந்தத் தொழிலை தொடங்கினால் அதிக இலாபம் பெறலாம் என அறிய முடியும். இதன் அடிப்படையில் அறிக்கையைத் தயாரித்து வங்கியில் சமர்ப்பித்து கடனுதவியும் பெற்றிடலாம்.</li> <li style="text-align: justify;">தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்களை ஆண்டுதோறும் நடத்தி, பெரும்பாலான மாணவர்களை சுயதொழில் தொடங்கிட ஊக்குவித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக விளை பொருள்களைப் பதனிடுதல், பால் மற்றும் பால் சார்ந்த மதிப்பு மிக்க பொருட்கள் தயாரித்தல், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, முட்டை கோழி மற்றும் இறைச்சி கோழி வளர்ப்பு போன்ற தொழில்களைத் தொடங்குவதற்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.</li> <li style="text-align: justify;">இது தவிர, 15 நாட்கள், வேளாண் தொழில் நிறுவனங்களில், பட்டதாரிகளுக்கு நேர்முகப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால் கல்லூரியில் பயின்ற பாடத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதிலுள்ள சிக்கல்களையும், அவற்றை சமாளிப்பது பற்றியும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.</li> <li style="text-align: justify;">தொழில் முனைவோர் புதிய பொருட்களைத் தயாரித்து, அவற்றை சந்தையில் விற்று, இலாபகரமாக தொழிலை அமைத்திடத் தேவையான தன்னம்பிக்கை பெற்ற பிறகே அவர்கள் இந்த மையங்களிலிருந்து பிரிந்து சென்று தனிச்சையாக செயல்பட முடியும்.</li> <li style="text-align: justify;">இந்தப் பாடதிட்டங்கள் கடந்த நான்கு வருடங்களாகத் தான் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற வேளாண்மை பட்டதாரிகளை தொழில் முனைவோராக மாற்றிட மத்திய அரசின் நிதி உதவியுடன் இரண்டு மாத பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளர்களுக்கு புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் பற்றியும், அவற்றை தொழில்ரீதியாக மாற்றுவது பற்றியும், வேளாண்மை சேவை மையங்கள் அமைத்திடத் தேவையான வழிமுறைகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.</li> <li style="text-align: justify;">இப்பயிற்சிக் காலம் முடிந்த பின்பு இப்பயிற்சியாளர்கள் தாங்கள் தயாரித்த வேளாண் தொழில் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து வங்கிகளில் கடன் பெற்று புதிய தொழில் தொடங்கிடலாம் அல்லது நடத்தும் தொழிலை விரிவாக்கம் செய்திடலாம். அதாவது 100 புதிய பொருட்கள் தயாரித்து விற்பனை மேற்கொண்டால், இவற்றில் 6-8 பொருட்கள்தான் அதிக முதலீடு செய்வதால் நஷ்டம் ஏற்பட்டு தொழில் முனைவோரின் முனைப்பைதளர்க்க செய்கின்றன.</li> <li style="text-align: justify;">மேலும் பல்கலைக்கழகத்தில் வேளாண்மைத் தொழில் போற்றிடும் மையங்கள் (Business Incubation Centre) நிறுவப்பட்டு, பல புதிய பொருட்கள் தயாரிக்கத் தேவையான கட்டுமான அமைப்புகளை, அமைத்து, தொழில் முனைவோருக்காக சேவை புரியப்பட்டு வருகிறது.</li> </ul> <p style="text-align: justify;">எனவே, வேளாண் தொழில் தொடங்க முனைப்பாக உள்ள மாணவர்கள் மற்றும் வேளாண் தொழில் முனைவோர்களும் இவ்வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி வெற்றியடையலாம்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641 003</p> </div>