தேர்வு அறையில் நடந்துகொள்ள வேண்டிய நடைமுறைகள் உங்களுக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டதும் பரபரப்பாக உடனே விடைகளை எழுதத் தொடங்கிவிடாதீர்கள். தெரியாத அல்லது கடினமான வினாக்களைப் பார்த்து சோகமாகிவிடாதீர்கள். வினாத்தாளை விரைவாக முழுமையாகப் படித்துப் பார்த்துவிட்டு, முதலில், தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதத் தொடங்குங்கள். தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் நடந்துகொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த பயனுள்ள தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: தேர்வு கால அட்டவணையை வீட்டில் உள்ள அனைவரும் பார்க்கும் இடத்தில் ஒட்டி வைக்கவும். எந்தெந்தத் தேதிகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன என்பதை அது அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், கையேடுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் வைக்கவும். இல்லாவிட்டால் கடைசி நேரத்தில் அவற்றை எங்காவது ஞாபகமறதியாக வைத்துவிட்டுத் தேடும் நிலை ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். தேவையான பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவற்றைத் தேர்வுக்கு முதல் நாளிலேயே எடுத்து வைத்துக் கொள்ளவும். ஹால் டிக்கெட்டை மறந்துவிடாதீர்கள்! தேர்வு எழுத அது மிகவும் முக்கியம். தேர்வுக்கு முந்தைய நாட்களில் நள்ளிரவு வரை கண் விழித்துப் படிக்க வேண்டாம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால் அடுத்த நாள் தேர்வு எழுதும்போது சோர்வாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். தேர்வு நேரத்தில் பதற்றம் வேண்டாம். தேர்வுக்குச் செல்லும்போது பட்டினி வேண்டாம். அளவோடு சாப்பிட்டுச் செல்லவும். திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் தகுந்த மருந்துகளை சாப்பிட்டுவிட்டுத் தேர்வுக்குச் செல்லவும். தேர்வு தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு நடைபெறும் பள்ளிக்குச் சென்றுவிடுவது நல்லது. இதனால், பஸ் தாமதம் போன்ற கடைசி நேரப் பரபரப்புகளில் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்க முடியும். தேர்வு மைய வளாகத்தில் உங்களிடம் உள்ள பாடக் குறிப்புகளை சிறிது நேரம் திருப்பிப் பார்த்துவிட்டு அமைதியாக இருக்கவும். மற்றவர்களுடன் தேவையில்லாத அரட்டை வேண்டாம். தேர்வு அறையில் உங்களது தேர்வு எண் குறிப்பிடப்பட்டுள்ள இருக்கையில் அமரவும். அதற்கு முன்னதாக, உங்களது புத்தகங்களையும் உங்களது பையில் ஏதாவது பாடக்குறிப்புகளோ, காகிதங்களோ இருந்தால், அதையும் சேர்த்து தேர்வு அறைக்கு வெளியில் வைத்துவிட்டு வரவேண்டும். உங்களுக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டதும் பரபரப்பாக உடனே விடைகளை எழுதத் தொடங்கிவிடாதீர்கள். தெரியாத அல்லது கடினமான வினாக்களைப் பார்த்து சோகமாகி விடாதீர்கள். வினாத்தாளை விரைவாக முழுமையாக படித்துப் பார்த்துவிட்டு, முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடை எழுதத் தொடங்குங்கள். விடைத்தாளில் தேர்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ள இடத்தைத் தவிர வேறு இடங்களில் தேர்வு எண்ணையோ, பெயரையோ எழுதக்கூடாது. விடைத்தாளில் தேர்வு எண்ணைச் சரியாக எழுதியிருக்கிறோமா என்பதை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். தேர்வில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே பேனாவால் எழுத வேண்டும். புதிய பேனா வேண்டாம். அது சில நேரங்களில் சரியாக எழுதாமல் போகலாம். எனவே, ஏற்கெனவே பயன்படுத்திய பேனாவையே பயன்படுத்தவும். முன்னெச்சரிக்கையாக, கூடுதல் பேனாக்களை வைத்துக்கொள்ளவும். தேர்வு அறையில் மற்ற மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். விடைகளை எழுதுவதில் மட்டுமே உங்களது முழுமையான கவனம் இருக்கட்டும். ஒவ்வொரு வினாவுக்கும் விடை அளிக்க எவ்வளவு நேரம் என்று திட்டமிட்டுக்கொண்டு விடைகளை எழுத வேண்டும். இதனால், சில வினாக்களுக்குப் பதில் தெரிந்தும் நேரம் இல்லாமல் போய், விடை எழுதாமல் விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. சில வினாக்களுக்கு விடை எழுத அதிக நேரம் பிடிக்கலாம். அதுபோன்ற நிலையில், அடுத்து எழுதும் விடைகளில் அந்த நேரத்தைச் சரி செய்து கொள்ளவேண்டும். விடை எழுதும்போது தேவையான இடங்களில் வரைபடங்களை வரைய வேண்டும். அதற்காக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. தேர்வு நேரத்தில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தேர்வுக்கூடக் கண்காணிப்பாளரிடம் மட்டுமே கேட்க வேண்டும். பக்கத்தில் உள்ள மாணவர்களிடம் கேட்கக்கூடாது. ஆரம்பம் முதல் இறுதி வரை கையெழுத்து சீராக இருக்கட்டும். அதற்காக மெதுவாக எழுதி நேரத்தை வீணடிக்கவும் தேவையில்லை. கூடியவரை அடித்து அடித்து எழுதுவதைத் தவிர்க்கவும். எந்த வினாவுக்கும் அரைகுறையாக விடையளிக்க வேண்டாம். சுருக்கமாகவாவது முழுமையாக விடை எழுத முயலுங்கள். ஏதேனும் ஒரு வினாவுக்கு விடை நன்கு தெரிகிறதே என்று நேரம் போவது தெரியாமல் தேவைக்கு அதிகமாக நீட்டி முழக்கி எழுதிக்கொண்டிருக்காதீர்கள். அப்புறம், மற்ற வினாக்களுக்கு விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். தேர்வு நேரம் முடிய சிறிது நேரமே இருக்கிறது என்றால், எழுத வேண்டிய விடைகளைச் சுருக்கமாக எழுதி, உரிய நேரத்திற்குள் முடிக்கப் பார்க்க வேண்டும். தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுதி முடித்துவிட்டு, எழுதிய விடைகளைச் சரிபார்ப்பது நல்லது. தெரியாத வினாக்களுக்கு விடைகளை எழுதவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தெரிந்த அனைத்து வினாக்களுக்கான விடைகளை எழுதி முடித்துவிட்டு, பின்னர் தெரியாத வினாக்களுக்கான விடைகளை நினைவுக்குக் கொண்டுவந்து எழுத முயற்சிக்க வேண்டும். விடைத்தாளை தேர்வு எழுதிய மேசையிலேயே வைத்துவிட்டு வெளியேறக்கூடாது. தேர்வுக்கூடக் கண்காணிப்பாளர், உங்களிடம் வந்து விடைத்தாளைப் பெற்ற பிறகு தான் வெளியேற வேண்டும். ஆதாரம்: நான் முதல்வன்